×

’தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்’ தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தின் உள்கிராமங்களிலும் பரவி விட்டது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவே இல்லை. அதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர்
 

கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தின் உள்கிராமங்களிலும் பரவி விட்டது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவே இல்லை. அதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எஸ்.எஸ்.முஸ்தபா கோரிக்கை வைத்துள்ளார். அதற்கான காரணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளிகள் திறப்புத் தேதியை இதுவரை அரசு அறிவிக்க முடியாத சூழல் உள்ளது. எனினும் சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகளிலும், ஆசிரியர்கள் வேகமாக பாடம் எடுத்துச் செல்வதால் மாணவர்கள் எதுவும் புரியாத நிலையே உள்ளது.

இதற்கிடையே தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில், கடந்த இரு நாட்களாக  அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவியர் வாங்கி வருகின்றனர். இதுபோல் தனியார் பள்ளிகளிலும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் கட்டணம் செலுத்தி பாடப்புத்தங்கள் வாங்கப்பட்டுவிட்டன. ஆனால், தனியார் பள்ளிகள் புத்தகங்களை மாணவர்களுன்கு வழங்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் கேட்டு படையெடுத்து வருகின்றனர். இதனால் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதை தடுக்க பல பள்ளிகள் தங்களது அலுவகத்தையே மூடிவிட்டன. கொரோனா விடுமுறையில் வீட்டில் வைத்தே சில பெற்றோர்கள் பாடங்களைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.

கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பாடப்புத்தகம் வழங்க தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கல்விக் கட்டணத்தில் புத்தகக் கட்டணமாக 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை தனியார் பள்ளிகள்  கட்டணம் வசூலிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் வருவாயின்றி தவிக்கும் மக்களிடம் மின்கட்டணம் என்ற  பெயரில் பகல் கொள்ளை நடைபெற்றுள்ள தற்போதைய நிலையில், கல்விக் கட்டணத்தை 40 சதவீதம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

இந்த நீதிமன்ற அனுமதியை வைத்துக்கொண்டு கந்து வட்டிக்காரர்கள் போல் தனியார் பள்ளி உரிமையாளர்கள் தற்போது செயல்படத் தொடங்கி விட்டனர். கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். ஆகவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்குவது போல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகங்களை வழங்க அரசு முன்வர வேண்டும்.

அப்படி அரசு விலையில்லா புத்தகங்களை வழங்கினால், கல்விக் கட்டணத்தில் பெரும் சுமையைக் குறைக்க வழிவகை ஏற்படும். ஆகவே தனியார் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகங்களை வழங்குவதோடு, தனியார் பள்ளிகள் புத்தகக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.