அடுத்தடுத்து மாற்றம் : ஒரே நாளில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி..!
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையையும் வெளியிட்டுள்ளது.15-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் சார்புச் செயலாளர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஜெ.குமரகுருபரன், வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சுற்றுலா, கலாச்சாரத் துறைச் செயலாளராக ஸ்வர்ணா, தொழில் மற்றும் முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்தூரி, பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ், ஜவுளித்துறை ஆணையராக சோபனா, வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் செயலாளராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் தொழிலாளர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா மற்றும் மீன்வளத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்குநராக பாஸ்கர பாண்டியன், கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை இயக்குநராக ஆஷா, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநராக கிறிஸ்துராஜ், டிட்கோ முதன்மைச் செயலாளராக கார்த்திகேயன், பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சஜீவனா, சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன், சேலம் மாநகராட்சி ஆணையாளராக லலிதியா நீலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.