தோழர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தொடக்க காலத்தில் மாணவர் தலைவராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவராக உயர்ந்தது வரை, சுதாகர் ரெட்டி தனது வாழ்வை பாட்டாளிகள், உழவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்தார்.
கூட்டணி பேச்சு வார்த்தைகள் தலைவர் கலைஞர் நினைவேந்தல் என அவர் தமிழ்நாடு வரும்போது எல்லாம் அவரது அன்பையும் தெளிவான பார்வையையும் அருகில் இருந்து கண்டுணர்ந்திருக்கிறேன். நீதி மற்றும் மாண்புக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்வு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் பொதுவுடமை இயக்க தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.