×

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் (02.01.2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்கவும், தொடர்ந்து இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீனவ கிராமத்திலிருந்து 9 மீனவர்கள் இரண்டு மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 02.01.2026 அன்றிரவு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ள முதல்வர் , புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடைபெற்றுள்ள இச்சம்பவம், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று தொடர்ந்து கைது செய்வதும், அவர்களது மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தடையின்றி நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் , தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 73 மீனவர்களும், 251 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடர்ச்சியான கைது சம்பவங்கள், தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களிடையே பெருத்த இன்னல்களையும், பதட்டத்தையும், மன உளைச்சலையும்  ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இனிமேல் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், மத்திய அரசு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.