×

ஐநா விருது பெற்ற சுப்ரியா சாகுவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

 

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரியா சாகுவுக்கு, ஐ.நா.வின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' (Champions of the Earth) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகச் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.இயற்கைப் பாதுகாப்புப் பணிகளில் அவர் ஆற்றிய அயராத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது.

சுப்ரியா சாஹுவின் சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலையைக் குறைப்பதற்கான வழிமுறைகள், வனப்பரப்பை அதிகரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், மற்றும் 'மீண்டும் மஞ்சப்பை' போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள் ஆகியவை அவரது முக்கியப் பங்களிப்புகளாகும். இந்த முயற்சிகள் மூலம் அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார்.

இந்த நிலையில் ஐ.நா.வின் விருதை பெற்றுள்ள சுப்ரியா சாகுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள்!

ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.