நோட் பண்ணிக்கோங்க..! ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்..!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் :
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ரேஷன் கிடங்குகளை முறைப்படுத்தவும் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் ரேஷன் கடையில் ஒவ்வொரு மாதமும் கியூவில் நின்று பொருள் வாங்குபவர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் இருந்து, மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல், மே, ஜூன்) தேவையான ரேஷன் பொருட்கள் ஒரே தவணையாக (Bulk Distribution வழங்கப்பட உள்ளன. கோதுமை கொள்முதல் தொடங்க உள்ளதால், மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய இருப்புகளைக் காலி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ல் நடத்தப்பட்ட சோதனையில் 41 லட்சம் போலி கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது 99% ஆதார் இணைப்பு முடிந்துள்ளதால் விநியோகம் மிகவும் வெளிப்படையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏடிஎம் (ATM) மற்றும் வங்கி விதிகள் மாற்றம் :
புதிய நிதியாண்டு தொடங்குவதால், வங்கிப் பரிவர்த்தனைகளில் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் ஜியோ பேமெண்ட் வங்கி போன்றவற்றில் புதிய வசதி மற்றும் சில பரிவர்த்தனை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எச்டிஎஃப்சி (HDFC) இலவச பரிவர்த்தனை: எச்டிஎஃப்சி கார்டு இல்லாமல் யூபிஐ (UPI) மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி, இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கப்படும். இலவச லிமிட் (HDFC ஏடிஎம்-ல் 5 முறை, மற்றவற்றில் 3-5 முறை) தாண்டினால், ஒருமுறை பணம் எடுக்க ரூ.23 பிளஸ் வரி வசூலிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB): பாதுகாப்பு காரணங்களுக்காக டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பண வரம்பை ஒரு லட்சத்திலிருந்து ரூ.50000 - ரூ.75,000 ஆகக் குறைத்துள்ளது.
ஜியோ பேமெண்ட் வங்கி: அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளிடம் சென்று கியூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்து கைமாற்றாக ரொக்கப் பணம் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது.
ஆதார் கார்டு லேட்டஸ்ட் அப்டேட் :
ஆதார் கார்டில் சில திருத்தங்களை உங்கள் வாழ்நாளில் குறிப்பிட்ட முறை மட்டுமே செய்ய முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிறந்த தேதி (DOB): வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும் (சரியான சான்றிதழ் அவசியம்).
பாலினம் (Gender): இதுவும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே திருத்த முடியும்.
பெயர் மாற்றம்: வாழ்நாள் முழுவதும் இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
எத்தனை முறை: முகவரி, மொபைல் எண், கைரேகை, கண் கருவிழி மற்றும் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் அப்டேட் செய்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மண்டல அலுவலகத்திற்கு (Zonal Office) நேரில் சென்று சிறப்பு அனுமதி பெற வேண்டும்.