×

சுந்தர் சி விலகல் கவலை இல்லை..! "புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு உண்டு" : கமல்ஹாசன் அறிவிப்பு..!

 

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை மூத்த இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த நவ.13 ஆம் தேதி, கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, இப்படம் கைவிடப்படுகிறதா? அல்லது இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாக்கப்படுமா? எனும் கேள்விகள் இணையத்தில் வலம் வந்தன. இந்த நிலையில், நடிகர் ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் நாங்கள் தொடர்ந்து கதைகள் கேட்டுக்கொண்டே இருப்போம் என தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுபற்றி, செய்தியாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

நான் முதலீட்டாளன் என்னுடைய நட்சத்திரத்துக்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்கு பிடிக்கும் வரையில் நாங்கள் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்” எனக் கூறியுள்ளார். இத்துடன், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு உள்ளதா? எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு “வாய்ப்பு உள்ளது, கதை நன்றாக இருக்க வேண்டும்” என நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

இதனால், இளம் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இப்படத்தை இயக்கக்கூடும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.