பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா? - சு.வெங்கடேசன் கேள்வி
இந்திய விளையாட்டு ஆணையத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களின் எண்ணிக்கை சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா? என நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுப்பியுள்ள கேள்வியில், இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உள் விசாரணைக் குழுக்கள், அவற்றின் உள்ளடக்கம், புகார்கள் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு (எண் 176/ 25.11.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார். இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தின் கீழ் 12 மண்டல மையங்களும், பல்வேறு பயிற்சி மையங்கள் தேசிய அளவிலான சீர்மிகு நிறுவனங்கள், விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. எனது கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 12 மண்டல மையங்களில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அந்தந்த மண்டல மையங்களுக்கு உட்பட்ட அமைப்புகளில் எழும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மண்டல மையங்களின் குழுக்கள் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 2020 - 24 க்கு இடைப்பட்ட காலத்தில் 22 புகார்கள் வந்தன என்றும் அவற்றில் 18 புகார்களுக்கு தீர்வுகள் தரப்பட்டுள்ளன என்றும், உள்விசாரணைக் குழுக்களில் சட்டத்தின்படி வெளியாட்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.