இந்தியன் வங்கி தேர்வு முடிவுகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கூட்டுத்தாக்குதல் - சு.வெங்கடேசன்
இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், சமூக வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் கட் ஆப் மதிப்பெண் குறிப்பிடப்படாமல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தேர்வு முறைமைக்கு எதிராகவும் கூட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் 300 உள்ளூர் மட்டத்திலான அலுவலர்கள்(Local Bank Officers) பணி நியமனத்திற்கான அறிவிக்கை ஆகஸ்டு 31, 2024 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 9, 2024 இருந்தது. அக்டோபர் 10, 2024 அன்று ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் அடுத்த கட்டத்திற்கு 1,305 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் நவம்பர் 27, 2024 அன்று வெளியானது. ஒவ்வொரு தேர்விலும் எவ்வளவு மதிப்பெண் வரையில் எடுக்கப்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது வங்கிப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஐபிபிஎஸ்(Indian Banking Personnel Selection) என்ற அமைப்பு ஒவ்வொரு முறையும் "கட்-ஆஃப்" மதிப்பெண்களை வெளியிட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களைத் தேர்வு செய்யும் தேர்வாணையங்களும், முடிவுகள் வெளியாகையில் மதிப்பெண்களையும், எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வாகியுள்ளார்கள் என்பதையும் வெளியிடுகின்றன. ஆனால், பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வெளியாகவில்லை.
அறிவிக்கையில், "தேர்வர்கள் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு விண்ணப்பிக்கும் தேர்வர், பிற மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியிழந்தவராவார். மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப்பட்டியல் மாநில வாரியாக மற்றும் பிரிவு வாரியாகத் தயாரிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகளில் மாநில வாரியான மற்றும் பிரிவு வாரியான மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இல்லாமல் தகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில், இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தபோதெல்லாம் இட ஒதுக்கீடுகளில் தவறுகள் செய்யப்பட்டிருந்தன. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் அந்தப் பிரிவினருக்கான இடங்களைத் தராமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல மதிப்பெண்கள் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்பிரிவில் சேர்க்கப்படாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவுப் பணியிடங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இது இட ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானதாகும். சமூக நீதிக்காகப் போராடும் அமைப்புகள் தலையிட்டதால் அந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டன. ஆனால் தேர்வு நடைமுறையில் அது போன்ற பிரச்சனை மீண்டும் வந்துள்ளது.