×

கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் பயங்கர தாக்குதல்

 

சிதம்பரம் அருகே அரசு கல்லூரி விரிவுரையாளர் மீது முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் புவனகிரியைச் சேர்ந்த மணியரசன் (31) என்பவர் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அரசு கல்லூரிக்கு அருகில் உள்ள டீக்கடைக்கு பைக்கில் வரும் விரிவுரையாளர் மணியரசனை, சிலர் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. 

இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த 8 ஆம் தேதி கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சிலர் கல்லூரிக்குள் சென்றதாகவும், அவர்களை விரிவுரையாளர் மணியரசன் வெளியே அனுப்பியதாகவும், அந்த முன் விரோதத்தின் காரணமாகவே விரிவுரையாளர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.