மாணவர்கள் ஷாக்..! 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் படிப்புகள் அதிரடி நிறுத்தம்!
தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். (B.Sc.B.Ed) மற்றும் பி.ஏ. பி.எட். (B.A.B.Ed) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, வரும் 2026-2027 கல்வியாண்டு முதல் அதிரடியாக நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) கடந்த 2025 செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிட்ட பொது அறிவிப்பின்படி, இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்போது அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாணவ, மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு
1. வரும் 2026-2027 கல்வியாண்டு முதல், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள எந்தவொரு கல்லூரியும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். மற்றும் பி.ஏ. பி.எட். படிப்புகளில் புதிய மாணவர்களைச் சேர்க்க அனுமதி இல்லை.
2. பல்கலைக்கழகம் பொறுப்பல்ல: இந்தத் தடையை மீறி ஏதேனும் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நடத்தினால், அதற்கு பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாருக்குப் பாதிப்பில்லை?
ஏற்கனவே இந்தப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்களுக்கு இந்தப் புதிய உத்தரவால் பாதிப்பு இருக்காது. அவர்கள் தங்களது படிப்பைத் தொடர்ந்து முடிப்பதற்கான வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படும்.
ஏன் இந்த மாற்றம்?
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் (NEP) ஒரு பகுதியாக, ஆசிரியர் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே, பழைய நடைமுறையிலான 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் போன்ற புதிய பாடத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆகும். தெரிந்தவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும்.