×

பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை!

 

கோவை தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லையால் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கோட்டை மேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி,  ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி சமீபத்தில் அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழை வாங்கி கொண்டு வேறு பள்ளியில் சேர வெளியேறியுள்ளார். ஆனால் பள்ளி மாறுவதற்கான காரணத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலுடனே மாணவி இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று மாலை மாணவி தனது நண்பர் ஒருவருக்கு செல்போனில் தொடர்ந்து மன உளைச்சலுடன் இருப்பதாக பேசி உள்ளார். அதன்பின் மாணவி செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த நண்பர், வீட்டிற்கு வந்து பெற்றோருடன் சேர்ந்து பார்த்த போது, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த உக்கடம் போலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி சிலரின் பெயரை குறிப்பிட்ட கடிதத்தை எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது. 

இது குறித்து மாணவியின் நண்பர் கூறுகையில், மாணவி படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவியுடன் செல்போனில் அடிக்கடி பேசி நண்பன் போல பழகியதாகவும், இதை வைத்து அடிக்கடி மாணவியிடம் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அடிக்கடி ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதால் மன உலைச்சலில் இருந்த அவர்  தன்னிடம் கூறி புலம்பியதாகவும், ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாமல் தான் அவர் வேறு பள்ளிக்கு சென்றதாகவும் கூறினார். மேலும் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.