10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை
10-ம் வகுப்பு மாணவன் முதல் நாள் பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுவால்பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார். அவரது மகன் கணேஷ்(15) திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் அப்பள்ளி மாணவன் கணேஷ் முதல் நாள் தமிழ் தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு தூங்க சென்றுள்ளார். மாலை 4 மணி அளவில் அறையில் புடவையில் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை பார்த்த மாணவனின் தாய் கதறினார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று இறந்த மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை செய்துக் கொண்டாரா, தேர்வு மையத்தில் நெருக்கடி தரப்பட்டதா, வீட்டில் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திருத்தணியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.