சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞரிடம் விடிய விடிய விசாரணை- பகீர் வாக்குமூலம்
திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு,கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை, வாயை பொத்தி இளைஞர் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர், மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு தகவல் சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பரிசு அறிவித்து தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மின்சார ரயிலில் செல்வது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து 13 நாட்களுக்கு பின் குற்றவாளியான மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட நபரை குற்றம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு அழைத்து சென்று போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அப்போது தான் தான் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஐஜி, டிஎஸ்பி, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.