ஸ்டாலின் கொந்தளிப்பு :பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்..!
தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வேலூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பேசுகையில், "இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பசியும், வறுமையும் தான் பெரும்பாலானோரின் வாழ்க்கை நிலையாக இருந்தது. அந்த வறுமையை கட்டுப்படுத்தத்தான் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு சொன்னபடி தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றின. ஆனால், அதுவே ஆபத்தாக மாறும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக ஒன்றிய அரசு நம்மை தண்டிக்கப் பார்க்கிறது. நடக்கப்போகும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சதித் திட்டத்தை சட்டமாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம்.
தமிழ்நாட்டுக்காக போராட பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் இல்லை என்று எண்ணினால் அது மிகப்பெரிய தவறு. அவர்களின் மொத்த உருவமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கடைசி மூச்சு இருக்கும்வரை தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக களத்தில் நிற்பான், சண்டை செய்வான்.
மேலும், "மத்திய அரசுக்கு எதிராக பேசினால் படிப்பறிவு அற்றவர் என்கிறார்கள். பியுஷ் கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்; அத்துமீறி வாய்க்கொழுப்போடு திமிர்த்தனமாக பேசி வருகிறார். மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்" என தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறிய பியுஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக இதுகுறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் திணிக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டைப் பாதிப்பது போன்றோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை இது என்றும் காட்டமாகத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.