×

இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்! 

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த  9 மீனவர்கள் கோடியக்கரை அருகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றிவளைத்து கொடிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்  9 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.  இரு படகுகள் சேதமடைந்திருக்கின்றன. அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளும், பலநூறு கிலோ மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடல் கொள்ளையர்களின் இந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறைந்தது வாரத்திற்கு இரு முறையாவது தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால், அதன் மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் தமிழக காவல்துறையின் கடலோரப் பாதுகாப்பு குழு  செயல்பட்டு வரும் போதிலும்,  கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும்  இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை; மாநில அரசுக்கு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. 

இலங்கை கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை தாக்கப்படும் போதும்,  கடற்கொள்ளையர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்வதை மட்டும்  தமிழக காவல்துறை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இந்த சிக்கலை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கடற்கொள்ளையர்களின் தாக்குதலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தவறி விட்டது.  மீனவர்கள் தாக்கப்படும் போது மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதும் வழக்கமான கடிதத்தைத் தாண்டி இந்த சிக்கலில் எந்த நடவடிக்கையும் இல்லை.

இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை இனியும் வேடிக்கை பார்க்காமல், அவர்கள் மீது பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி  கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இலங்கை கடற்கொள்ளையர்களை  இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்க தமிழக அரசும், தமிழக காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.