×

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை - இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!! 

 

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து டிசம்பர் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  புதுக்கோட்டை தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் படகுகளுடன் அடுத்தடுத்த நாட்களில் இலங்கை கடற்படையினர் கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் 68  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 12ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு விசைப்படகுகளில் திருப்பி வழங்குமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய நிலையில் , தற்போது 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.