×

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜூலை 8 வரை காவல் - இலங்கை  நீதிமன்றம் உத்தரவு.. 

 

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும்  ஜூலை 8ம் தேதி வரை காவலில் வைக்க  மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16ஆம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள்.  இந்த நிலையில் நேற்று வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.  

இந்நிலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள், நேற்று கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், சிறைபிடித்த ஒரு படகையும்  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.