இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் செயல்: ப.சிதம்பரம் கண்டனம்!
ஜூலை 13 அன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத் தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதிர்ச்சிச் செய்தி. ‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அதுபோன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது.
குறள் 123-லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல். காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள்.. இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்துவர் தின விழா நடந்தது. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. கேடயத்தில் இடம்பெற்றிருப்பது திருக்குறளே இல்லை என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களை திரும்ப பெற்று, திருக்குறளை திருத்தம் செய்து சில தினங்களில் மீண்டும் வழங்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.