குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - டிட்கோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்களை ஏவி வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த ஊர், புவி வட்டப் பாதைக்கு மிக அருகிலும், ராக்கெட் ஏவுதளம் இயங்க தட்பவெப்ப சூழல் சாதகமாகவும் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டது. 1,500 ஏக்கரில் ஆய்வு மையத்திற்கு அருகே தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்வெளிப் பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தமிட்டுள்ளது.