×

தன் மீது எத்தனை வழக்கு போட்டாலும் கவலையில்லை- எஸ்பி  வேலுமணி

 

தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை எனவும், கோவை மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறாடாவுமான எஸ்.பி.வேலுமணி இன்று காலை முதல் விருப்ப மனுக்களை வழங்கிவந்தார்.

இதை தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, கோவையில் சாலைப்பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர், தற்போதைய அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தாமல் முந்தைய அரசு மீது குற்றம் சாட்டுகிறது

தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. தன் குடும்பத்தினர், நண்பர்கள் என தினமும் பலரை, விசாரணை என்ற பெயரில் போலீசாரும், அதிகாரிகளும் அலைக்கழிக்கின்றனர். தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை  ஆனால் கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை உடனடியாக சீர் செய்யாவிட்டால் ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.