×

மகன், மனைவியை உயிருடன் தீவைத்து கொளுத்திவிட்டு கணவரும் தற்கொலை- நெல்லையில் பயங்கரம்

 

நெல்லையில் குடும்ப பிரச்சனையில் மனைவி, மகனை தீ வைத்து எரித்து கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தையும் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை பாளையங்கோட்டை ஆரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சகரியா (வயது 65). இவரது மனைவி மெர்சி (வயது 58). மகன் பினோ (வயது 27). பினோவிற்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தந்தை சகரியாவிடம் மகன் பினோ மற்றும் மனைவி மெர்சி இருவருமே முறையாக கலந்து ஆலோசிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகரியா அடிக்கடி தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி  சகரியா தனது வீட்டை பூட்டி விட்டு உள்ளிருந்த மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் சகரியா அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து கதவை பூட்டிக் கொண்டு வீட்டில் இருந்த பொருட்கள் துணிகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதில் தீயானது 3 பேர் மீதும் பிடித்தது வலி தாங்க முடியாமல் மூவரும்  அலறி துடித்தனர். இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மூன்று பேர் மீதும் தீயானது அதிக அளவு பிடித்து மூன்று பேருமே காயம் அடைந்தனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியிலேயே அதிக தீக்காயம் அடைந்த மெர்சி, அவரது மகன் பினோ இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த சகரியாவிற்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முன்னீர் பள்ளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.