“பேருந்துகள் பள்ளி வளாகத்திற்கு அருகிலே வந்து மாணவர்களை அழைத்துச் செல்லும்”- அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் பள்ளி வளாகத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயணஅட்டை வழங்கியும் மற்றும் பள்ளி வளாகத்திலிருந்து மாணவ, மாணவிகளுக்காக 50 சிறப்புபயண நடைகள் இயக்கப்படும் பேருந்துகளை கொடி அசைத்து துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், “தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பஸ் பாஸ் செப்டம்பர் மாதம் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு உள்ளாகவே வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் துவங்கி வைத்துள்ளார். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பேருந்தில் மற்றவர்களோடு சேர்ந்து பயணிக்கும் பொழுது கூட்டங்களில் சிக்குகிறார்கள். அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதியை செய்து கொடுக்க அந்த அறிவுரை வழங்கி அந்த முறையில் 50 இடங்களில் தனி பேருந்து இயக்கப்பட்டிருக்கிறது. பள்ளி வளாகத்திற்கு அருகிலே வந்து அழைத்துச் செல்லும்.
அடுத்தடுத்த கட்டங்களில் மற்ற பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த பள்ளிக்கு பேருந்து தேவை இருக்கின்ற இந்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கே எல்லாம் அந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதலில் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு செல்வார்கள் கதவு அமைக்கப்பட்டு பாதுகாப்பற்ற பயணங்கள் இல்லாத நிலையில் பார்த்துக் கொள்கிறோம். எங்காவது ஒன்று இடங்களில் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். 20,000 பேருந்துகளை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அதுவும் ஓட்டுநர் அந்த வழித்தடத்திற்கு புதிய ஓட்டுநர் என்பதால் அப்படி நிகழ்ந்துள்ளது அதற்குப் பிறகு நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.