×

நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்ற பாஜக சட்டமன்ற தேர்தலில் வென்றது எப்படி? அதிமுக பதிலடி

 

அண்ணாமலைக்கு அதிமுக ஐ.டி. அணி செயலாளார் சிங்கை ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்


தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகிகள் பலர், அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில்,  “கூட்டணியில் இருந்தபடி அதிமுக இதை செய்திருக்கக்கூடாது, பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுகவில் அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் இனி பாஜகதான். அண்ணாமலை தலைமை கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்” என எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்திருந்தார்.  மேலும் பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அண்ணாமலைக்கு அதிமுக ஐ.டி. அணி செயலாளார் சிங்கை ராமச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLAக்களை வென்றது என்பதே இதற்கான பதில். அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே! குறைவான வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்.எல்.ஏக்களை வென்றது என்பதே இதற்கான பதில்” எனக் கூறியிருந்தார். 


இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பாஜக தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன. ஜெயலலிதா, கருணாநிதி போல நானும் ஒரு தலைவர் நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். நான் தலைவர் மாதிரிதான் முடிவெடுப்பேன், மேலாளர் மாதிரி முடிவெடுக்க மாட்டேன்” என்றார். 



இதற்கு பதில் அளித்துள்ள சிங்கை ராமச்சந்திரன், “இதை சொல்லக் கூட திராவிட தலைவர் மாண்புமிகு அம்மா அவர்கள் அண்ணாமலை அவர்களுக்கு தேவைப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.