×

30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் எஸ்ஐ பூமிநாதன் உடல் நல்லடக்கம்!

 

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாகவே ஆடுகளை மர்ம கும்பல் திருடி வந்துள்ளது. ஆகவே இதை தடுக்க திட்டமிட்டு, நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயன்றுள்ளார். துணைக்கு போலீஸ் இல்லாமல் தனியாகச் சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அந்த திருட்டு கும்பல் கீரனூர் அருகே பூமிநாதனை வெட்டி படுகொலை செய்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர்.  பூமிநாதன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை  படுகொலை செய்த கும்பலை பிடிக்க  2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே இச்சம்பபம் உலுக்கியுள்ளது.

பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியில் இருக்கும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று,  மிகுந்த துயரம் அடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் 1 கோடி ரூபாய் நிதி உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கவும் உத்தரவிடுவதாகவும் அறிவித்தார். தற்போது பிரேத பரிசோதனைகள் முடிந்து, திருச்சி சோழமாநகரில் அவரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.