×

கடும் வயிற்று வலி... அறுவை சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி: ஆந்திர பெண் உயிருடன் மீட்பு!

 

ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரில் உள்ள மருத்துவனையில் பெட்லூரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது வயிற்றை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, அவரது வயிற்றுக்குள் இருந்த பொருட்களை கண்டு திகைத்துப் போனார்கள்.

பிறகு டாக்டர் பி. ராமச்சந்திர ரெட்டி தலைமையிலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, ஒரு சிக்கலான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். இத்தனை பொருட்கள் எப்படி அவரது உடலுக்குள் சென்றன, அல்லது அவற்றை அவரே விழுங்கினாரா அல்லது வேறு யாராவது அவரை அவ்வாறு செய்யக் கட்டாயப்படுத்தினார்களா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அவர் அவற்றை தானாகவே உட்கொண்டிருந்தால், அவருக்குள் இருக்கும் மனநலப் பிரச்சனையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். உணவு அல்லாத பொருட்களை உட்கொள்ளும் இந்த வகையான செயலை, மருத்துவத்தில் பிக்கா சிண்ட்ரோம் (pica syndrome) என்று அழைக்கப்படுகிறது; இது சிலரை ஊட்டச்சத்து இல்லாத பொருட்களை உண்ணத் தூண்டும் ஒரு நிலையாகும். இதற்கிடையில், அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்