×

“என் மீது வழக்குகளை போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது; சட்டப்படி எதிர்க்கொள்வேன்”- செந்தில் பாலாஜி

 

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய வழக்கு நீண்ட நாள் செல்லாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்  செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை.  எஃப்.ஐ.ஆரில் பெயர் இல்லாத நிலையிலும் கைது செய்திருக்கிறார்கள். எப்.ஐ.ஆரில் பெயர் உள்ள நபர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஏற்கனவே அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிலிருந்து லஞ்சஒழிப்பு துறை புதிய வழக்கு போட்டுள்ளது. இந்த வழக்கு நீண்டு செல்லாது. 


எம்எல்ஏ பேர வழக்கில் என் பெயரை சேர்த்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையும் என் மீது புதிதாக வழக்கு பதிந்தது. த.வெ.க அரசு ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் வழக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக்கப்பூர்வமான அரசு என்றால் மக்களுடைய பிரச்சனைகளை பார்க்க வேண்டும். ஆனால் என் மீது வழக்குகளை போடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்டப்படி எதிர்கொள்வேன். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும். சட்டப்படி எத்தனை வழக்குகள் போட்டாலும் நீதிமன்றம் மூலமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சட்டப்படி நீதிமன்றம் சென்று, அனைத்து வழக்குகளும் பொய்யான வழக்குகள் என்று நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.