செந்தில்பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது : அமலாக்கத் துறை எதிர்ப்பு!
இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த முறை இவ்வழக்கு விசாரணை நடந்தபோது, 15 நாட்கள் மட்டும் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி தந்தால் போதும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று அசோக்குமார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை தரப்பில், “விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் அசோக் குமார் ஒருமுறை கூட ஆஜராகவில்லை. அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம்” என்று வாதம் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கள் எதுவும் அமெரிக்காவில் உள்ளதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத் துறை இல்லை என்று பதில் அளித்திருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஒருமுறை கூட ஆஜராகாத அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை மீண்டும் வாதம் வைத்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுவதற்கு இந்திய மருத்துவரின் பரிந்துரை பெற வேண்டியது அவசியம். மருத்துவர் பரிந்துரை செய்தது தொடர்பான ஆவணங்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை” என்று அசோக்குமார் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக பதில் அளிக்க அசோக் குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.