×

"செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும்"  - விஜயகாந்த் கோரிக்கை!!
 

 

கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா  நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன . பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா தொற்று  படிப்படியாக குறைந்து வரும் நிலையில்,  தற்போது பள்ளி,  கல்லூரிகளில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் ,பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்புதேர்வுக்கான பாடங்களை முழுமையாக முடிக்கவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைன் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை,  ஆன்லைன் வகுப்புகள் எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில் நேரடித் தேர்தல் நடத்தப்பட்டால் ,தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  மேலும் நேரடி தேர்வுகள் நடத்த தமிழக அரசு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கினாலும் அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா  என்பது கேள்விக்குறியே. எனவே மாணவர்களின் நலன் கருதி நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன்  முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்த கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.