திருக்குறளில் கலப்படம்... ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை
ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தேசிய மருத்துவ தினத்தையொட்டி கடந்த 13ம் தேதி ஆளுநர் மாளிகையில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு நினைவுப் பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. அந்தக் கேடயத்தில் திருக்குறள் ஒன்றும், அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்றும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிந்தது. ஆனால் தற்போது அப்படி திருக்குறளே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் போலியான திருக்குறள் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது ஆளுநர் மாளிகை வழங்கிய கேடயத்தில்,
செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. ( திருக்குறள் 944) - என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், உண்மையாக திருவள்ளுவர் எழுதிய 944வது குறள்,
அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. - என்பதுதான் . ஒரு வேளை குறளின் எண் மாறியிருக்கலாம் என்றால், அதுவும் இல்லை ; திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் இப்படி ஒரு குறளே இல்லை என்கிறனர் தமிழ் ஆர்வலர்கள்.