விரைவில் துணை ஜனாதிபதி தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடக்கம்: தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த 21-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. ஜனாதிபதியை முன் அனுமதி பெறாமல் திடீரென சந்தித்து அவர் பதவி விலகியது நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உருவாக்கியது. அவரது பதவி விலகலுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முறைப்படி அறிவித்தது. இதுதொடர்பாக உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கையெழுத்திட்ட அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மேலும், இது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்தது. மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திரா மோடி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை இணைச் செயலாளராக கரீமா ஜெயின், மாநிலங்களவை இயக்குனர் விஜயகுமார் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.