×

பொது வேட்பாளராகும் சீமான்? திமுகவிடம் நெருக்கம் காட்டுவதன் பின்னணி

 

அம்பாசமுத்திரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதியில் களமிறங்கும் முனைப்புடன் சீமான் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியிட வெறிக் கொண்டு காத்திருக்கிறேன் என்று சீமான் அறிவித்திருப்பதால், அவர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இருந்தாலும் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக கட்சியில் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.

இந்நிலையில் சீமான் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் சீமானுக்கு சாதகமாகவே முடிந்தன. இதன்பின்னரே சரத்குமார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடனும் நட்பு பாராட்டினார். மறுபக்கம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியுடன் இணக்கமாக இருந்து வருகிறார். இதனால் அனைத்து தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் சீமான் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் சீமான் கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றம் நடந்துவிடக் கூடாது என்பதால், மீண்டும் திமுகவுடன் பேசி இருக்கிறார்.

அப்போது திமுக தரப்பில், நீங்கள் உங்களின் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் பூத் வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து பணிகளை வேகப்படுத்தி இருக்கிறார். விரைவில் தவெகவுக்கு எதிரான போராட்டங்களையும் சீமான் கையில் எடுக்க உள்ளார். இந்த இடைத்தேர்தல் மூலமாக எப்படியாவது சட்டசபை சென்றுவிட வேண்டும் என்று சீமான் தீவிரமாக இருப்பதால், அக்கட்சியினர் மீண்டும் உற்சாகத்துடன் பணிகளை தொடங்கியுள்ளனர்.