×

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு பேச்சு... சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகளை ஆதரித்தும் பிரபாகரனைப் புகழ்ந்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் மூவர் மீதும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் குற்றப்பத்திரிகையும் சமர்பித்தனர். அதேபோல இவர்கள் மூவரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இன்று மீண்டும் இவர்கள் மூவரும் ஆஜராகியுள்ளனர்.

2008ஆம் ஆண்டு தான் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் தொடங்கிய காலகட்டம். அப்போது தான் பிரபாகரனை சீமான் சந்தித்துப் பேசினார். அதற்குப் பின் ராமேஸ்வரத்தில் சீமான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். கருங்கல்பாளையத்தில் இதேபோன்று பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டார். அதற்குப் பின் அவர் பிணையில் விடுதலையானார். இந்த வழக்கு தான் மேற்சொன்ன வழக்கு. இதற்குப் பின்னர் தான் நாம் தமிழர் இயக்கத்தை சீமான் தொடங்கினார்.