×

நாகை காஸ்மோபாலிடன் கிளப்புக்கு ‘சீல்’ வைப்பு! அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி

 

நாகப்பட்டினத்தில் ரூ.87 லட்சம் வாடகை கட்டாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் காஸ்மோபாலிடன் கிளப்புக்கு சீல் வைத்தனர்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட காஸ்மோபாலிடன் கிளப் உள்ளது. 1927 ஆண்டு தொடங்கப்பட்ட காஸ்மோபாலிடன் கிளப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உறுப்பினராக உள்ளனர். மேலும் இந்த கிளப் வளாகத்தில் இரண்டு சக்கர வாகன பாதுகாப்பு மையம் கட்டணத்திற்கு செயல்படுகிறது. இரவு பகலாக செயல்படுவதால் நாகப்பட்டினம் புதியபஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ் ஏறி வெளியூர் செல்வோர்கள் இந்த வாகன பாதுகாப்பு மையத்தில் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வார்கள். 

இந்நிலையில் கிளப் அமைந்துள்ள 7,229 சதுரமீட்டர் இடம் மற்றும்அதில் உள்ள கட்டிடங்கள் நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இந்த இடத்திற்கு ரூ.87 லட்சம் வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருப்பதால் அதனை பூட்டி சீல் வைக்கப்படும் என  இந்துசமய அறநிலைத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைபார்த்தவுடன் கிளப் நிர்வாகி ராஜேந்திரன் ரூ.30 லட்சத்தை முன்பணமாக வங்கியில் செலுத்தினர். இந்நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள், முதலில் இரண்டுசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். அப்போது காஸ்மோபாலிடன் கிளப் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்த வெளிப்பாளையம் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் யாரும் தடுக்க கூடாது என போலீசார் கூறினர். இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் வளாகத்தில் உள்ளே சென்று அங்குள்ள அறைகள்பூட்டப்பட்டிருந்தது, அதன் பூட்டை தாங்கள் கொண்ட வந்த சுத்தியலால் உடைத்தனர். பின்னர் அறநிலையத்துறை ஊழியர்கள் கொண்டு வந்த பூட்டை போட்டு சீல் வைத்தனர். அப்போது காஸ்மோபாலிடன் கிளப் நிர்வாகி ராஜேந்திரன் கடந்த 97 ஆண்டுகளாக தங்கள் அனுபவத்தில் உள்ளது. 

இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் வாடகை செலுத்தவில்லை என கூறி சீல் வைக்க வந்துள்ளனர். அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த நோட்டீசில் இடம் என்றும் சர்வே எண்ணில் குளறுபடி உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான  இடம் என்றால் அதற்கான ஆதாரத்தை எங்களுக்கு வழங்கவில்லை. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. இதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் இந்த இடத்தை மீட்போம் என்றார்.

சீல் வைக்க வந்த அறநிலையத்துறைஅதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும், காஸ்மோபாலிடன்கிளப் உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது காஸ்மோபாலிடன் கிளப் சார்பில் வந்த வழக்கறிஞர்கள், வருவாய்த்துறையினர் இல்லாமல் அறநிலையத்துறையினர் மட்டும் வந்து எப்படி? சீல் வைக்கலாம் என ஆவேசமாக பேசினார். அப்போது இந்த இடம் தொடர்பான விவகாரத்தில் நீங்கள் தானே கோர்ட்டில் வழக்கு தொடுத்தீர்கள் என இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி விளக்கம் அளித்தார். இதனால் வேறு வழியின்றி காஸ்மோபாலிடன் கிளப் உறுப்பினர்கள் கூச்சலிடுவதை நிறுத்தினர். இதையடுத்து அறநிலையத்துறை ஊழியர்கள் வெளியில் வந்து இரும்பு கேட்டை பூட்டி சீல் வைத்து விட்டு சென்றனர்.