தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு..!!
தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாட்கள் பள்ளி திறப்பை கல்வித்துறை தள்ளி வைத்து, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 4ம் தேதி (இன்று) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 49 நாட்கள் கிடைத்துள்ளது.
முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கு புதிதாக வரும் மாணவர்களை வரவேற்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-
பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குவதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விலையில்லா பாட புத்தகங்களும், ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
இது தவிர 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 2 செட் இலவச சீருடை நாளை வழங்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் இவை அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழக முழுவதும் சுமார் 4 கோடி பாட புத்தகங்களும் சுமார் 5 கோடி நோட்டுப் புத்தகங்களும் பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் முதல் நாளே இவற்றைப் பெறக்கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய மாணவர் சேர்க்கையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.