×

மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளுடன், மாதந்தோறும்  ரூ.1,000 உதவித் தொகை! 
 

 

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் மூலம் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் பொருட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான 27வது கட்ட உதவி தொகையும்,  இலவச பயிற்சி திட்டமும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து தொடங்குகிறது . அடுத்த 11 மாத கால கட்டத்திற்கு நடைபெறவுள்ள இந்த பயிற்சி மையத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன் பெறலாம்.

அரசால் வழங்கப்பட்ட உள்ள திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு மேலும் படித்திருக்கலாம். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.  18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் அதே சமயம் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதும் அவசியம். 

விண்ணப்பங்களை நவம்பர் 30-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.  விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து அதனுடன் கல்வித் தகுதி , மதிப்பெண் பட்டியல் , சாதி சான்றிதழ்,  ஆதார் அட்டை ,வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், 3ஆவது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம், 56 சாந்தோம் பிரதான சாலை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வாகும் நபர்களுக்கு  பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை, கணினி செயல்திறன், சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.