400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் சென்ற பட்டியல் இனத்தவர்கள்!
திருமங்கலம் அருகே 400 ஆண்டுகளுக்கு பின் தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ளது செக்காணூரணி. அந்த கிராமத்தில் பேக்காமன் கருப்பசாமி கோவில் உள்ளது. பட்டியலினத்தவர்களை அனுமதிக்கக்கோரி தொடர்ந்து பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே கடந்த 400 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரே பேக்காமன் கருப்பசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். ஆனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என காலம் காலமாக நடைமுறை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்திலும் உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே கோவிலுக்கு வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என பூசாரி சின்னசாமி அருள் வாக்கு கொடுத்ததையடுத்து பட்டியலினத்தவர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.