சாத்தாங்குளம் வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிஐ தகவல்!
தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலை வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. இதுவரை சாத்தான்குளம் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. சிறையில் தந்தை, மகன் இறந்தபோது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ காவல்துறையினர் தங்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தல், கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகியவற்றை குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிரிகள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. தற்போது வரை முழு ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையிடம் இருந்து சிபிஐ பெறாத நிலையில் இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ இன்று அல்லது நாளை நேரில் பெற்றுவிட்டு உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப்பிரிவின் 7 அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலம் தமிழகம் வந்து விசாரணையை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐயோ, சிபிசிஐடியோ கைது செய்யப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள்ளாக உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.