ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்: இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை!
சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தனி அணியாகப் போட்டியிட்டு 'எதிரிகளையும் துரோகிகளையும்' வீழ்த்த வேண்டும் எனச் சசிகலா திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி மாற்றம் குறித்து சசிகலா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஓபிஎஸ்-இன் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என சூளுரைத்துள்ளார்.