புதிய கட்சி தொடங்குகிறாரா சசிகலா?
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24 அன்று சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று V.K.சசிகலா முதன்முறையாக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதன் முகூர்த்த கால் நடும் வைபவம் இன்று காலை 9.30 மணியளவில் பசும்பொன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதனை அடுத்து பங்கேற்ற அனைவரும் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டிடிவி தினகரன் சமீபத்தில் அவரது அமமுக கட்சியில் இருந்து விலகிய ஜீவிதா நாச்சியார், முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பசும்பொன் ராமகிருஷ்ணன், ஜீவிதா நாச்சியார், முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ளதுரை பேசும்போது 25 ஆயிரம் பங்கேற்க உள்ள பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும், இந்த பொது கூட்டம் சிறப்பான கூட்டமாக அமைய வேண்டும் என்று பேசினார்.
பின்னர் பேட்டி அளித்த பசும்பொன் ராமகிருஷ்ணன், வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாளை ஒட்டி சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். கூட்டம் மட்டும்தானா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சசிகலா புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாரா, வேட்பாளர் அறிவிப்பு உள்ளாரா, கூட்டணி பற்றி பொதுக்கூட்டமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சசிகலா அறிவிப்பார் என கூறினார்.