×

சென்னையில் தனியார் பேருந்து இயக்க முடிவு- சசிகலா கண்டனம்

 

திமுக தலைமையிலான அரசு சென்னை மாநகரில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வேளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரபோக்குவரத்துக் கழகம் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு எடுத்து இருப்பதாக வரும்தகவல் மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த மக்கள் விரோத முடிவு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களை கொண்டுள்ள சென்னை மாநகரில் 3,436 அரசு பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து 'கிராஸ்காஸ்ட்கான்ட்ராக்ட்' என்ற ஒப்பந்த முறையில் இயக்க முடிவெடுத்து இருப்பது மிகவும் மோசமான ஒரு நடவடிக்கையாக தொழிற்சங்கத்தினர் கருதுகின்றனர். மேலும் மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்க கூடியதாக இருக்காது என்பதும் அனைவரது கருத்தாக இருக்கிறது. 

அரசு பேருந்துகளை பயன்படுத்துகிறவர்கள் பெரும்பாலும் ஏழை. எளிய, சாமானிய நடுத்தர மக்கள்தான் என்பதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திமுக தலைமையிலான அரசு, மக்களுக்கு பயனளிக்கின்றன அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் லாப நஷ்ட கணக்கு பார்ப்பதை விட்டு விட்டு
சேவை மனப்பான்மையோடு செயல்படவேண்டும். 

இதன் காரணமாக அரசு கழகங்கள் அழிந்து போகும் அவல தள்ளப்படும். மேலும், இது போன்று மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையைத்தான்காட்டுகிறது. மக்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய கூட தனியார் தான் வரவேண்டும் என்றால் இந்த ஆட்சியாளர்கள் எதற்கு? அரசாங்கம் எதற்கு? இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் புறநகர் பகுதிகளில் மக்களுடைய தேவைகளின் அடிப்படையில் சிற்றுந்துகளை ஏற்பாடு செய்து மக்களுக்கு சிரமமின்றி பார்த்துக்கொண்டோம். ஆனால் இன்றோமாநகரங்களிலேயே போதுமான அளவுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் தனியாரை தேடி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

 திமுக தலைமையிலான அரசு தற்போது எடுத்து இருக்கும் இந்த மோசமான நடவடிக்கையின் காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும். அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிபோய்விடும். மேலும், மும்பை மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் இது போன்றுஒப்பந்த முறையில் தனியார் பேருந்துகளை நடைமுறைப்படுத்தி அது மிகவும் தோல்வி அடைந்து இருப்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, இந்த ஆட்சியாளர்கள் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நலனைக்கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை உடனே கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.