“3 மாதங்களாக சம்பளம் வரல”- கடலூரில் போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்
மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து கடலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதனை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளும் மாநகராட்சி உடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத கண்டித்து இன்று திடீரென கடலூர் -புதுச்சேரி சாலையில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்திய போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராத நிலையில் தாங்கள் சிரமப்பட்டு பணி செய்யும் நிலையிலும் தங்களுக்கு மூன்று மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேலும் ஊதியம் வழங்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிந்தது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன் கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.