×

இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி; உப்பு விலை உயர்வு

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெறும்  கோடை காலத்தில் அடிக்கடி பெய்த கோடை மழையின் காரணமாக உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் உப்பின் விலை 1500 ரூபாயில் இருந்து திடீரென்று 5,000 ரூபாய் ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உள்ள சுமார் 30 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மூலம் ஆண்டுக்கு 25லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  ஆனால் கடந்த ஆண்டும் பெய்த கோடை மழையின் காரணமாக உப்பு உற்பத்தி 50 சதவீதம் குறைந்த நிலையில் இந்த ஆண்டும் உப்பு முழுவீச்சில் நடைபெறும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அடிக்கடி கோடைமழை பெய்ததால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாதங்களில் சுமார் 7 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும் ஆனால் தற்போது  சுமார் 15 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  உப்பின் இருப்பு குறைந்துள்ளதால் கடந்த வாரம் டன் ரூபாய் 1500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உப்பின் விலை திடீரென்று டன் 5,000 ரூபாய் ஆக உயர்வடைந்துள்ளது. இருப்பினும் உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மீண்டும் முழுவீச்சில் உப்பு உற்பத்தியை துவங்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.