பட புரமோஷனுக்கு சென்று சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..
காஷ்மீர் படுகொலை சம்பவத்திற்கும், , பசுவுக்காக இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதற்கு, எந்த வித்தியாசமும் இல்லை என்றும், இரண்டுமே வன்முறைதான் என்றும் நடிகை சாய்பல்லவி கூறியிருக்கிறார். அவரது கருத்து சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராணா - சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ விரத பர்வம்’. வேணு உடுகுலா இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் நாளை மறுநாள் ( ஜூன் 17 ) வெளியாக உள்ளது. இந்தப் படம் நக்சலைட்டுகளை மையப்படுத்தி எடுக்கப்பப்பட்டுள்ளது. நடிகை சாய்பல்லவியும் நக்சலைட்டாக நடித்திருப்பதாகவே கூறப்படுகிறது. படம் ரிலீஸாகவுள்ளதையொட்டி, படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், விரத பர்வம் படம் குறித்து, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில், தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவரா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, “நான் நடுநிலையான குடும்பச் சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டு என்று கற்று கொடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடியாது.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்?. நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும, வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது.
நான் நடுநிலையானவள். பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள், சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களை தாக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். சாய்பல்லவியின் இந்த கருத்து தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.