பள்ளிகளில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு...!!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றிவரும் தற்காலிக கணினி உதவியாளர்களின் தின ஊதியத்தை உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்க பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 40 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக தற்காலிக கணினி உதவியாளர்கள் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தல், மாணவ, மாணவியர்களுக்காக வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து கணிணியில் பதிவேற்றம் செய்வது மற்றும் தலைமையகத்தில் கேட்கப்படும் பள்ளிசார் விவரங்களை உரிய படிவத்தில் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு 2024 முதல் 2025 வரை தினக்கூலி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.677 வீதம் 26 நாட்களுக்கு ரூ.17,602 என நிர்ணயம் செய்யப்பட்டு 11 மாதங்களுக்கு 167 தற்காலிக கணினி உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது கணினி உதவியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.802 என நிர்ணயம் செய்யப்பட்டு உயர்த்தி வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்காலிக கணினி உதவியாளர்களுக்கு ஜுன் 2025 முதல் மே 2026 ஊதியம் வழங்குவதற்கான செலவினத் தொகையான ரூ.4.77 கோடி ரூபாயை கல்வி செலவினங்கள் என்ற தலைப்பில் மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.