×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு : தமிழ்நாடு அரசு..

 

தமிழ்நாட்டில் ஒப்பந்தகால அடிப்படையில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் முறையாக நிரப்பப்படும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்கள் மற்றும் நிரப்பப்பட உள்ள 194 பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக வரக்கூடிய 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று தற்போது திருத்தப்பட்ட ஊதியம் என்பது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படக்கூடிய  ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்திருக்கிறது.

முன்னதாக,  இடைநிலை ஆசிரியர்களுக்கு 8,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 2017ல் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது.  இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017, 20 மட்டும் 22 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.