×

"மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்" - ஆர்டிஐயில் அம்பலம்; ஹைகோர்ட்டில் வழக்கு!

 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநருமான பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவப் பொருட்கள் மற்றும் எழுது பொருட்களை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடந்த இந்த ஊழலில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், அதற்கு சிறைக் கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு பொருட்கள் உற்பத்தி செய்து, அதிக உற்பத்தி செய்ததுபோல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.