×

திமுக  பிரமுகர் வெட்டிக்கொலை: தலைமறைவாக இருந்த ரவுடி கைது!!

 

சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த திமுக பிரமுகர் சம்பத்குமாரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார் கொலை செய்யப்பட்ட சம்பத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை வழக்கு விசாரணையில் கீழ்ப்பாக்கம் அடுத்த டிபி சத்திரம் 16 வது குறுக்கு தெருவை சேர்ந்த சம்பத்குமார் 102 ஆவது வட்ட திமுக அவைத்தலைவர் ஆகவும் பேச்சாளராகவும் இருந்துள்ளார். இவர் பிரபல ரவுடி லெனின் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன் அப்பகுதியில் நடக்கும் குற்ற செயல்கள் குறித்தும் போலீசார் துப்பு கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் ரவுடி லெனின் உறவினர்கள் சம்பத்குமாரை கொன்றுள்ளனர். இது தொடர்பாக  ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன் குமார், விநாயகம், இவரது மனைவி கற்பகம், பாலாஜி, மனைவி அமிர்தம் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில்  தலைமறைவாக இருந்த ரவுடி லெனின் அண்ணாநகர் போலீசாரால்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி லெனின் மீது காஞ்சிபுரத்தில் 4 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி லெனினின் கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.