உருட்டுகளும் திருட்டுகளும் : புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி..!
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
அதன்படி 15-வது நாளான நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பிரசார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சி பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் வரை சுமார் 46 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்த எழுச்சி பயணத்தின்போது மக்கள் எனக்கு அளித்த வரவேற்பு, ஆரவாரம், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை. நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தால் தவறா?. மக்களின் பிரச்சினைகள் தெரியாத அரசாங்கமாக தான் தி.மு.க. அரசாங்கம் உள்ளது. தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள். தி.மு.க. செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்படும். அ.தி.மு.க. கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும். இவ்வாறு அவர் கூறினார்.