எஸ்.ஜி.சூர்யாவை உடனடியாக விடுதலை செய்க.. சட்ட ரீதியாக போராடுவோம்.. - நிர்மலா சீதாராமன்..
தமிழக பாஜக மாநில செயலாளார் எஸ்.ஜி.சூர்யாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் , சென்னை தியாகராய நகரில் நேர்று இரவு, அவரை மதுரை தனிப்பை போலீஸார் கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த தகவல் அறிந்து பாஜகவினர், நள்ளிரவென்றும் பாராமல் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அத்துடன் அவர்கள் திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் , அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு அக்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிரணி செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். அவர் கைது கண்டனத்திற்குறியது. மலக்குழி மரணங்களின் மீது தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்ச்சி எடுப்பது நியாயமா? தமிழக முதலமைச்சர் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.